கிராமங்களில் துவக்கிய இளைஞர்கள் கவலை
வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2009 01:29   
(1 vote, average 5.00 out of 5)

 

கிராமப் பகுதிகளில் ஒரு ஆண்டுக்கு முன் துவக்கப்பட்ட பொதுச் சேவை மையங்கள் போதிய வசதிகளை பெற முடியாததால் செயல் இழந்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் கிராம மக்களின் வசதிக்காக பொதுச் சேவை மையங்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் துவக்கப்பட்டது. இந்த மையங்கள் மூலம் கிராம மக்கள் ரயில், விமான டிக்கெட்டுகளை பெறுவது, மின்சார, டெலிபோன் கட்டணங்கள், பத்திரப்பதிவு துறை வசதிகள், ஆர்.டி.ஓ., லைசென்ஸ் புதுப்பித்தல், இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்துதல் உட்பட அனைத்து சேவைகளையும் பெறலாம். இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்தியும் தேவையான விபரங்களை பெறலாம். இதற்காக மாநில அளவில் இரு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டன.

மதுரை உட்பட தென்மாவட்டங்களில் "3ஐ இன்போடெக்' நிறுவனம் இவற்றை நிர்வகித்தது. மாநில அளவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களும், மதுரை மாவட்டத்தில் 85 மையங்களும் துவக்கப்பட்டன. செயலிழக்கும் மையங்கள்: இதில் கிடைக்கும் வருவாய் ஏஜன்சிகளுக்கும், சேவை மையம் நடத்துவோருக்கும் 65:35 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவித்தனர். இதையடுத்து கிராமங்களில் படித்த பல இளைஞர்கள் ரூ. 1.25 லட்சம் டிபாசிட் செலுத்தி மையங்களை துவக்கினர். கம்ப்யூட்டர் சிஸ்டம், இன்டர்நெட் இணைப்பு போன்ற வசதிகளும் கிடைத்தன. கடந்த ஆண்டு டிசம்பரில் துவக்கப்பட்ட இம்மையங்களில் பல போதிய வசதிகள் கிடைக்க பெறாததால் இன்று செயலிழந்து விட்டன. இவற்றை நடத்தும் இளைஞர்களுக்கு வருமானம் கிடைக்கவில்லை. பல மையங்கள் குறிப்பாக நிலையூர், கோவில்பாப் பாக்குடி, சக்கிமங்கலம், ஆண்டார்கொட்டாரம், விளாச்சேரி உட்பட பல மையங்கள் திறக்கப் பட்டாலும் ஆட்கள் யாரும் வராததால் வெறிச்சோடியே கிடக்கின்றன.

அரசு துறைகளின் ஒருங்கிணைப்பு இன்னும் கிடைக்காததால் மின்சார கட்டணம், டெலிபோன் கட்டணம் செலுத்துதல் உட்பட வேறெந்த வசதிகளையும் பெற முடியவில்லை. இதனால் பல மையங்கள் தனியார் தொலைபேசி இணைப்புகளின் ரீசார்ஜ் மையங்களாகவும், இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்துவது, ரயில் டிக்கெட் பெறுவது போன்ற வசதிகளுடன் மட்டுமே செயல்படுகின்றன. கிராம அளவில் ரயில், விமான டிக்கெட்டுகளை பெறுவோர் இல்லாததால் இம்மையங்களில் அந்தச் சேவையையும் அதிகமாக அளிக்க முடியவில்லை.

காரணம் என்ன?: இது தொடர்பாக 3 ஐ இன்போ டெக் மையங்களில் விசாரித்த போது, ""மதுரை மட்டுமல்ல மாநில அளவிலும் மையங்கள் அனைத்தும் செயல்பட்டே வருகின்றன'' என்றனர். மாநிலம் முழுவதுமே முழுமையாக செயல்படவில்லை என்றே இத்துறை சார்ந்த அலுவலர்கள் கருத்து தெரிவித்தனர். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த டிசம்பரில் துவக்கி வைக்கப்பட்ட பின்பு, திருமங்கலம் இடைத்தேர்தல், பின்பு பொதுத் தேர்தல் வந்தது. எனவே இந்த மையங்களுடன் இணைந்து செயல்படவேண்டிய தேசிய தகவல் மையத்தின் (நிக்) சேவையை முழுமையாக பெற முடியவில்லை. அதன் பின்பு ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டிய ஏஜன்சிகளும் போதிய ஆர்வம் காட்டியிருந்தால் அரசை நிர்பந்தித்து இந்த வசதியை முழுமையாக செயல்படுத்த ஏற்பாடு செய்திருக்கலாம்.

 

கருத்து (0)

Subscribe to this comment's feed

கருத்தை கூறவும்

சிறியது | பெரியது
security image
மேலே காணப்படும் எழுத்துக்களை நிரப்புக

busy
 

விளம்பரம்