
சென்னை புதுவண்ணாரப்பேட்டை 5-வது வட்ட தி.மு.க. செயலாளராக இருப்பவர் ஒத்தவாடை சண்முகம் (வயது 38). இவர் லாரி டிரான்ஸ் போர்ட் தொழில் செய்து வந்தார். அந்த பகுதியில் ஏதாவது பிரச்சினை என்றால் இவரே தலையிட்டு பேசி முடித்து விடுவார் அந்த வகையில் பாதிக்கப்பட்ட சிலர் சண்முகத்திற்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் சண்முகம் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் ராஜாவுடன் நேற்று இரவு மணலி சென்று விட்டு திரும்பினார். வழியில் ராஜாவை இறக்கிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். புது வண்ணாரபேட்டை மாதா கோவில் தெருவில் வந்த போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் வழி மறித்தது. அவர்கள் கையில் வீச்சரிவாள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
அசம்பாவிதம் நிகழப்போவதை உணர்ந்த சண்முகம் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓட முயன்றார். அதற்குள் கொலை வெறி கும்பல் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் சண்முகத்தின் தலை மார்பு, கழுத்து என 30 இடங்களில் வெட்டு விழுந்தது. இருந்தாலும் உயிர் தப்பிக்க ரத்தம் சொட்ட சொட்ட ஓடினார். ஆனால் கொலைவெறி கும்பல் விடாமல் துரத்திச்சென்று அவரை வெட்டி சாய்த்தது. பின்னர் கும்பல் தப்பி ஓடி விட்டனர்.
குற்றுயிரும் குலை உயிருமாய் உயிருக்கு போராடிய சண்முகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டேன்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இரவு 11.30 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக ஒத்தவாடை சண்முகத்தை அவரது எதிரிகள் தீர்த்து கட்டி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கொலைக் கும்பலில் 6 பேர் இருந்தாலும் இதன் பின்னணியில் மேலும் 4 பேர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.





