தமிழகத்தில் நெல்லையில் தான், கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடப்பதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் கூறினார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது : விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நேற்று முன்தினம் இரவோடு அசம்பாவிதங்களின்றி முடிந்தது. சில இடங்களில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டன. காலம்காலமாக பிரச்னை இருந்த திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை, திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் சுமுகமாக ஊர்வலம் நடந்தது. இது போலீசாருக்கு பெருமையான விஷயம்.
கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. இதில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நெல்லையில் தான் கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடப்பதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. திருமங்கலத்தில் பதிவான "ஆன்-லைன்' லாட்டரி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது. வெளிமாநில லாட்டரிகள் தமிழகத்தில் ஊடுருவதை தடுக்க கன்னியாகுமரி, மதுரை, கோவை மாவட்ட எல்லை செக்-போஸ்ட்டுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மணல், அரிசி, எரிசாராயம் கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மணல் திருட்டில் ஈடுபட்ட இருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்த இயக்கங்களை ஆதரித்து பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் வழக்குகள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை நகரில் "வாரம் ஒரு வீதி' திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இத்திட்டத்தை மற்ற நகரங்களிலும் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.





