
நேரு கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் இந்திய அணி சடன்-டெத் முடிவில் 6-5 என்ற கோல் கணக்கில் சிரியாவை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. 14ஆவது நேரு கோப்பை கால்பந்து போட்டி டெல்லியில் நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, சிரியா, இலங்கை, கிர்கிஸ்தான், லெபனான் ஆகிய 5 நாடுகள் கலந்து கொண்டன. லீக் ஆட்டங்கள் முடிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, சிரியா அணிகள் நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
வழக்கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதை தொடர்ந்து அளிக்கப்பட்ட முதல் 15 நிமிட கூடுதல் நேரத்திலும் கோல் எதுவும் விழவில்லை. இரண்டாவது 15ஆவது கூடுதல் நேரத்தில் (114ஆவது நிமிடம்) இந்திய அணி கேப்டன் பெய்சூங் பூட்டியாவை, சிரியா வீரர் விதிமுறைக்கு மாறாக தடுத்து நிறுத்தினார். இதனால் இந்திய அணிக்கு பிரிகிக் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி ரென்னடி சிங் கோல் அடித்தார். கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் சிரியா அணி அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் அலி டியாப் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதல் 5 பெனால்டி ஷூட் முடிவில் இரு அணிகளும் தலா 3 பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றி சமநிலை வகித்தன. இதை தொடர்ந்து சடன்-டெத் முறை கையாளப்பட்டது. இதில் முதல் பெனால்டி ஷுட் வாய்ப்பை இரு அணிகளும் கோலாக்கின. அடுத்த வாய்ப்பை இந்திய அணி வீரர் கோலாக்கினார். ஆனால் சிரியா அணி வீரர் அடுத்த பந்தை இந்திய அணி கோல் கீப்பர் சுப்ரதா பால் அபாரமாக தடுத்தார். அவர் தடுத்ததும் ஸ்டேடியமே அதிர்ந்தது. இந்திய அணி வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் இந்திய அணி 6-5 (1-1) என்ற கோல் கணக்கில் சிரியாவை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2007ஆம் ஆண்டு நடந்த போட்டியிலும் இந்திய அணி, சிரியாவை வீழ்த்தி சாம்பியன் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஆட்டத்தை பாலிவுட் நடிகர் சல்மான்கான், மத்திய அமைச்சர்க பிரபுல் பட்டேல், எம்.எஸ்.கில் ஆகியோர் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.






