
உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. கோவா மாநிலம் பனாஜியில் இருந்து டெல்லி செல்லும் கோவா எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 5 மணியளவில் உ.பி. மாநிலம் மதுரா அருகே சென்று கொண்டிருந்தது. இதே பாதையில் சில மணி நேரத்துக்கு முன்பு சென்ற மேவார் எக்ஸ்பிரஸ், மதுரா ரயில் நிலையத்துக்கும் பிருந்தாவன் ரயில் நிலையத்துக்கும் இடையே சிக்னல் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத கோவா எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் டிரைவர், வண்டியின் வேகத்தை குறைக்காமல் சென்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் மேவார் எக்ஸ்பிரஸ் மீது கோவா எக்ஸ்பிரஸ் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பல பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து இறங்கின.
குண்டு வெடித்ததுபோல சத்தம் கேட்டதும் ரயில்களில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். கோவா எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் மோதியதில் மேவார் ரயிலின் ஒரு பெட்டி முற்றிலுமாக நொறுங்கியது. அதில் இருந்த பயணிகள் இருக்கையிலிருந்து குட்டிக்கரணம் அடித்து விழுந்தனர். சிலரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இரண்டு ரயில்களிலும் சேர்த்து 15-க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பல பெட்டிகளில் கதவுகள் திறக்க முடியாத அளவுக்கு நசுங்கி விட்டன. இதனால் பெட்டிகளுக்குள் ஏராளமான பயணிகள் சிக்கியுள்ளனர். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகள், மீட்புக் குழுவினர் விரைந்து வந்தனர். நொறுங்கிய பெட்டிகளில் ஜன்னல் கம்பிகளை வெல்டிங் மூலம் வெட்டி எடுத்து பயணிகளை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மதுரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளது. இன்னும் ஏராளமான பயணிகள் பெட்டிகளில் சிக்கியுள்ளனர்.
இதனால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கோவா எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் சிக்னலை கவனிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, டெல்லி ஆக்ரா வழித்தடத்தில் நிஜாமுதீன், ஆந்திரா, கர்நாடகா, அமிர்தரஸ், மும்பை ராஜதானி மற்றும் ஜபல்பூர்-டெல்லி ஆகிய 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.





