நாகரிகம் என்பது, சிறிய கிராமக் குடியிருப்புகளில் வாழ்ந்துகொண்டு அல்லது நாடோடிகளாகத் திரிந்துகொண்டு உயிர் வாழ்வதற்காக வேட்டையாடலையோ அல்லது சிறிய நிலங்களில் விவசாயத்தையோ மேற்கொண்ட குலக்குழுக்கள் அல்லது பழங்குடிகள் போலன்றி, பலர் நகர வாழ்க்கையை மேற்கொண்டு விவசாயத்தைப் பயன்படுத்தும் நிலையிலுள்ள சிக்கலான சமூகங்களைக் குறிக்கும். இதற்கீடான ஆங்கிலச் சொல்லின் மூலமான civis என்னும் லத்தீன் மொழிச் சொல் "பிரஜை" அல்லது "நகரவாசி" என்னும் பொருள்கொண்டது. நவீன தொழிற் சமூகம் ஒரு நாகரீக சமூகத்தின் ஒரு வடிவமாகும்.
நாகரீகத்தை உருவாக்குவது எது?
பொதுவாக நாகரீகங்கள் பின்வரும் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன:
* விலங்கு வலு, சுழற்சிப் பயிர்ச் செய்கை மற்றும் நீர்ப்பாசனம் போன்ற விவசாயத் தொழில் நுட்பங்களின் உயர்நிலைப் பயன்பாடு. இது விவசாயிகளின் உயிர்வாழ்வுத் தேவைக்கு அதிகமாக மேலதிக உற்பத்திக்கு வழிசமைத்தது.
* தங்களுடைய உணவைத் தாங்களே உற்பத்தி செய்வதற்காக பெருமளவு நேரத்தைச் செலவு செய்யத் தேவையின்றியிருந்த குறிப்பிடத் தக்க அளவு மக்கட் பிரிவினர். இவர்கள் வேறு தொழில்களிலும், வணிகத்திலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது. இது "specialization of labor" எனக் குறிப்பிடப்படுகிறது.
* நிலையான குடியிருப்புகளில் இவ்வாறான உணவல்லாதன உற்பத்திசெய்வோரின் சேர்க்கை நகரங்கள் எனப்பட்டன.
* ஒரு சமூகப் படிநிலையமைப்பு. இது ஒரு பிரபுத்துவ குடும்பத்தின் அல்லது ஒரு இனக்குழுவின் தலைவன் (chieftain) மக்களை ஆளும் தலைமைமுறை அரசாகவோ (Chiefdom) அல்லது ஆளும் வர்க்கம் அரசாங்கத்தின் அல்லது அதிகார வர்க்க (bureaucracy) த்தின் ஆதரவுடன் நடத்தும் ஒரு அரச சமூகமாகவோ இருக்கலாம். அரச அதிகாரம் நகரங்களிலே குவிந்திருக்கும்.
* சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கைக்கு நேரடியான ஆதாரமாக அமையாத பல்வேறு சிறப்புத் தொழில் துறை (specialized professions ) களின் உருவாக்கம்.
* குறைந்தளவு மரபார்ந்த பாரம்பரியங்களைக் கொண்ட சமூகங்களைப் போலன்றி, ஒழுங்கமைந்த சமயம் மற்றும் கல்வி போன்ற சிக்கலான, மரபுசார் சமூக நிறுவனங்களின் உருவாக்கம்.
* சிக்கலான பொருளாதாரப் பரிமாற்ற வடிவங்களின் வளர்ச்சி. இது பணம் மற்றும் சந்தைகளின் உருவாக்கத்துக்கு வழிவிடக்கூடிய வணிகத்தின் விரிவாக்கத்தை உள்ளடக்கும்.
* எளிய சமூகங்களில் இருப்பதிலும் கூடிய பொருள்சார் உடைமைகளின் திரள்வு.
* உயிர் வாழ்வுக்காக விவசாயம் செய்யவேண்டிய தேவையில்லாதவர்கள் உருவாக்கும் கலைகளின் உயர் வளர்ச்சி. இது எழுத்துத் துறையையும் உள்ளடக்கும்.
இந்த வரைவிலக்கணத்தின்படி, சீனா போன்ற சில சமூகங்கள் நாகரீக சமூகங்கள் என்பது தெளிவு, அதுபோல புஷ்மென் போன்ற வேறு சமுதாயங்கள் அவ்வாறில்லை என்பதும் வெளிப்படையாகும். எனினும் இந்த வித்தியாசம் எப்பொழுதும் தெளிவாக இருப்பதில்லை. எடுத்துக் காட்டாக, பசிபிக் வடமேற்கில் பெருவளவு மீன்கள் கிடைப்பது, விவசாயம் இன்றியே மேலதிக உணவு வழங்கலை உறுதிசெய்தது. இங்கு வாழும் மக்கள் நிலையான குடியிருப்புக்களையும், சமூகப் படிமுறையையும், பொருட் செல்வத்தையும், உயர் நிலையிலான கலைகளையும் (அதிக புகழுடையதாக குலக்குறிக் கம்பங்கள்) தீவிர விவசாய வளர்ச்சி இல்லாமலேயே உருவாக்கினார்கள். அதே சமயம் தென்மேற்கு வட அமெரிக்காவின் புவேப்லோ (Pueblo) பண்பாட்டினர் உயர்நிலை விவசாயம், நீப்பாசனம், மற்றும் தாவோஸ் போன்ற நிலையான சமுதாயக் குடியிருப்புகளை உருவாக்கியிருந்தும், நாகரீகத்தோடு சம்பந்தப்பட்ட சிக்கலான நிறுவனங்கள் எதையும் உருவாக்கவில்லை. இன்று பல இனக்குழுச் சமூகங்கள் அரசுகளுக்குக் கீழ் அவ்வரசுகளின் சட்டங்களின் அடிப்படையில் வாழுகிறார்கள். நாகரீகத்தின் அரசியல் அமைப்பு அவர்களுடைய வாழ்க்கை முறையின் மேல் திணிக்கப்பட்டுள்ளது, எனவே அவர்களும் நாகரீக மற்றும் இனக்குழுச் சமூக அமைப்புகளுக்கு மத்தியிலான இடைநிலையினராகத்தான் இருக்கிறார்கள்.
எனவே மேலும் அச்சொட்டான, வரையறுக்கப்பட்ட வரைவிலக்கணம் தேவையாகலாம். நாகரிகத்தின் விளைவுகளை நாகரிகம் என்ற கருத்துருவுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. நாகரீகம் என்பது, சட்டம் மற்றும் சொத்துரிமைகளின் அடிப்படையிலமைந்த மக்களிடையேயான அமைதிவழி ஊடாடல் (interaction) ஆகும்.
முதலில் உருவான நாகரீகம் சுமேரியர்களுடையதாகும். இவர்கள் கி.மு 3500 அளவில் நகரச் சமூகமாக உருவானார்கள்.
நன்றி : விக்கிபீடியா.


